லாரி திருடியதாக பி.டெக். பட்டதாரி இளைஞரை பிடித்துச் சென்று சட்டவிரோதமாக ஐந்து நாட்கள் சிறை பிடித்து நிர்வாணமாக்கி தாக்கி துன்புறுத்திய சிவகங்கை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், பி.டெக் பட்டதாரி. சொந்தமாக இரு டிராக்டர்கள் வைத்திருக்கிறார். பி.டெக் படித்திருந்தாலும் சுயமாக டிராக்டர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்று பிழைத்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு காலை கரும்பு ஏற்ற காத்திருந்த மணிகண்டனை, சிவகங்கை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன், எந்த தகவலும் கூறாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஆய்வாளர் நந்தகுமார் முன்னிலையில் அவரது உத்தரவின் பேரில், மணிகண்டனை நிர்வாணமாக்கி, தாக்கி துன்புறுத்தினர். கடைசியாக லாரி திருடிய வழக்கில் கைது செய்துள்ளதாகக் கூறி, ஐந்து நாட்கள் வரை சட்டவிரோதமாக சிறை வைத்து விட்டு, பின் உண்மையான திருடனைக் கண்டுபிடித்து விட்டதாக மணிகண்டனை விடுவித்தனர்.
இதையடுத்து மணிகண்டன், தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இன்று தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்ட மணிகண்டனை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சட்டவிரோதமாக சிறை பிடித்து, சித்ரவதை செய்த ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தொகையை, பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீடாக வழங்கவும், மனிதத் தன்மையில்லாமல் சட்டவிரோதமாக நடந்துகொண்ட இரண்டு காவல் துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
0 Comments